தலைப்பை பார்த்து தாம்தூம் என்று குதிப்பவர்கள் முழுவதும் படிக்கும் படி கேட்டுகொள்கிறேன்.
சினிமாவில் மாஸ் ஹீரோக்கள் ரசிகர்களை சம்பாதிக்கவும், இலாபத்தை பெற்றுக்கொடுக்கவுமே சரி. காலங்கடந்து போற்றபடுவார்களா? என்பது சந்தேகமே. மாஸ் ஹீரோக்கள் தமது ரசிகர்களே திருப்தி படுதுவதற்கும் குறிப்பாக அந்த தலைமுறை ரசிகர்களுக்கு ஏற்ற வகையில்தான் நடிப்பார்கள் இதனால் தொடர்ந்து வரும் தலைமுறைகளை இது கவருமா?? தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ வரிசையில் எம்.ஜி.ஆர், ரஜினி, விஜய், அஜித் என அடையாளம் காணப்படுகிறார்கள்.
1975 ல் அபூர்வ ராகங்களில் கதவை திறந்து கொண்டு தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரஜினி, அதன் பிறகு அவரின் கேரியரில் இதுவரை அவரின் இடத்திற்கு யாரும் போட்டியும் போடவில்லை, அவர் இடத்தை வேறு யாருக்கும் விட்டு தரும் நிலையும் வரவில்லை. தமிழ் சினிமாவை பொருத்தவரை ரஜினி ஒரு மறக்க முடியாத சக்தி, இவரின் ஸ்டைல் மட்டுமே இவரின் ரசிகர்களை கட்டி போட்டு வைத்திருக்கிறது என்றால் இது மிகையல்ல. இது வரை 154 படங்களை நடித்து முடித்திருக்கிறார் ரஜினி, இதில் கன்னடா, தெலுங்கு, பெங்காலி, ஹிந்தி போன்ற மொழிப்படங்களும் அடக்கம்.
16 வயதினிலே படத்தில் ரஜினியின் அட்டகாசமான நடிப்புடன் கூடிய ஸ்டைல் அனைவரையும் கவர்ந்தது. அதுவே அவருக்கு பெரிய திருப்பு முனையாகவும் அமைந்தது. அதற்கு பின்பு அவரின் இத்தனை படங்களில் அவரின் நடிப்புக்கு தீனி போடும் படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இது வரை அவரை நல்ல நடிகராக மக்களுக்கு காட்டிய படங்கள் இரு கைவிரல்களுக்குள் அடக்கம். என்னதான் தன்னுடைய ஸ்டைல் மக்களிடையே பிரபலம் என்றாலும் நடிப்புக்கு தீனி போடும் நல்ல படங்களைத் தேடி நடிக்காதது ஒரு நடிகனாக ரஜினியின் தோல்வியே.
இதற்கு முன்பு தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் தியாகராஜபாகவதர். அவர் பல திறமைகளில் கொடிகட்டிப்பறந்தவர். ஆனாலும் தமிழ் சினிமாவின் வரலாற்று அழிவில் சிவாஜி, எம்ஜிஆர் காலத்தில்தான் தமிழ் சினிமாவின் காலங்களே தொடங்குவதாக எண்ணிக்கொள்ளத் தோன்றுகிறது; அப்படி பார்த்தோமானால் சினிமாவை சரியாக தன் சொந்த வாழ்க்கைக்கு பயன் படுத்திக்கொண்டவர் எம் ஜி ஆர். ஆனால் தமிழ் சினிமாவின் ரசிகர்களால் சிறந்த நடிகராக பார்க்கப்பட்டவர் சிவாஜி என்பதை யாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
சிவாஜி மற்றும் எம் ஜிஆர் இருவரும் சம அளவு ரசிகர்களை கொண்டிருந்தாலும் காலம் கடந்தவர்கள் சினிமாவை பார்க்கும் போது மாஸ் ஹீரோக்களோ தயாரிப்பாளர்களை வாழவைத்தவர்களோ மட்டுமே சிறந்த நடிகராக இருக்க முடியாது. சிறந்த நடிகர் என்றால் இன்னமும் எம் ஜி ஆரை பின்னுக்குத்தள்ளி சிவாஜி வந்து நிற்கிறார். காலப்போக்கில் தமிழக முதல்வராக மட்டுமே எம்ஜி ஆர் பாக்கப்படுவார் சிறந்த நடிகராக சிவாஜியே இருப்பார் என்பது ஆணித் தரமான உண்மை.எம்.ஜி.ஆர் படங்களை இனிவரும் தலைமுறை இன்னும் பத்து வருடங்களில் மறந்துகூடப்போகலாம்.
இந்த விசயத்தை பார்க்கும் போது ரஜினி, விஜய், அஜித் போன்றோர் எம்.ஜி. ஆர் வரிசையில் வருகிறார்கள். ரஜினியால் வாழ்ந்த தயாரிப்பாளர்கள் நிறைய, இவரின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் எக்கசக்கம், ஆயினும் இவரால் எம்.ஜி ஆரைப்போல் தனக்கு கிடைத்த வரவேற்ப்பை காலம் கடந்து வைத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக்கொள்ள முடியவில்லை. அதற்கான வாய்ப்பு 1996 ல் வந்தாலும் அதை சரியான முறையில் கையாளாமல் விட்டு அது கை நழுவிப்போனதும் அனைவரும் அறிந்ததே.
1990 க்கு பிறகு கடைசி 20 வருடங்களில் அவர் நடித்த படங்கள் தளபதி, மன்னன், அண்ணாமலை, பாண்டியன், உழைப்பாளி, வீரா, பாட்ஷா, முத்து, அருணாச்சலம், படையப்பா, பாபா, சந்திரமுகி, சிவாஜி, குசேலன், எந்திரன். இதில் குசேலன், பாபா, பாண்டியன் தவிர அனைத்து படங்களுமே வெற்றிப்படங்கள். ஆனால் இதில் ரஜினியில் நடிப்பு பேசப்பட்டது தளபதி, பாட்ஷாவில் மட்டுமே. ரஜினியின் ரசிகர்கள் மற்றப்படங்களையும் கண்டீப்பாக மெச்சுவார்கள்.
ஆனால் காலங்கடந்த ரசிகர்கள் இந்த படங்களை பார்க்கும் போது மிக மட்டமான படமாகத்தான் தெரிகிறது. இதற்கு காரணம் இவர் எப்போதும் போன தலைமுறை மக்களுக்காகவே படம் எடுக்கிறார். அடுத்த தலைமுறை மக்களை அவர் கண்டுகொள்வதே இல்லை. இன்று வரை இவரின் சிறந்த படமாக பார்க்கப்படுவது 16 வயதினிலே, முள்ளும் மலரும், எங்கேயோ கேட்ட குரல், மூன்று முகம். இதில் எல்லாம் இவரின் நடிப்பு தனி முத்திரை பதிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படி ஒரு ரஜினியை இப்போதெல்லாம் தேடினாலும் கிடைக்க வில்லை…
இவரின் சகநடிகரான கமலஹாசன் தயாரிப்பாளர்களால் பெரிதும் விரும்ப படாதவராக கூட இருக்கலாம், ஆனாலும் இவரின் மைல்கல்கள் இவரை எதிர்கால சினிமா விரும்பிகளை வசியப்படுத்தி வைத்திருக்கிறது. கமலின் படங்கள் எப்போதும் ரசிகனை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதாகவே அமைகிறது, அவர் செய்யும் நகைச்சுவைப்படங்கள் உட்பட.
குணா படம் வந்த போது பார்க்காதவர்கள் ஏன் அப்போது பிறக்காதவர்கள் கூட இன்று அந்த படத்தை மெய் சிலிர்க்க பார்க்கிறார்கள். அந்த படம் அப்போது மக்களிடையே தோல்வி படமாகவே அமைந்தது. அப்போதைய ரசிகர்களின் மனநிலை, அதே போல் அன்பே சிவமும், விருமாண்டியும் கூட சொல்லலாம். அதற்காக கமல் கமர்ஷியல் படங்கள் தரவே இல்லையா என்று கேட்கலாம்… ஆனால் நான் நடித்த கமர்ஷியல் படங்களை நானே பார்க்க விரும்ப வில்லை என்பதை அவரே சொல்லி அவருக்கான தனிப்பாதையும் அமைத்திருக்கிறார்.
ரஜினி என்ற ஸ்டைல் புயல் நீண்ட நாட்கள் தமிழ் சினிமா மனதில் நிற்காது. அதன் காரணம் ரஜினியும் கமர்ஷியல் என்ற புயலில் அடித்துச்செல்லப்பட்டு விட்டார், ஹிந்தியில் கடைசி காலங்களில்ஆமிதாப் வயதுக்கான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து தன்னை ஒரு நல்ல நடிகனாக காட்டிக்கொண்டுள்ளார். ஆனால் யக்குபாய் படத்தில் ரஜினி வயதான பாத்திரத்தில் நடிக்காதது ஏன்?
அமிதாப்பின் அடுத்த தலைமுறையான அமீர்கான், ராஜா ஹிந்துஸ்தானி வரை டூயட் பாடிக்கொண்டிருந்தவர், அதன் பின்பு தனக்கான களம் அது அல்ல என்று புரிந்து பெப்லீ லைவ் வரை வந்துள்ளார், இது போன்ற படங்களை எல்லாம் ரஜினி யோசித்து கூட பார்த்திருக்க மாட்டார் என்பது நிச்சயம். இத்தனை வயதுக்கு பின்பும் ரஜினி எந்திரன் போன்ற கமர்ஷியல் சினிமாவில் நடிக்க வேண்டிய அவசியம் என்ன?? வசூல் ரீதியாக எந்திரன் பேசப்படலாம், டெக்னிகலாக பேசப்படலாம், ரஜினியில் நடிப்பு?? கேள்விக்குறியே??
ரஜினியை போலவே இன்றைய காலத்தில் அதிகளவான ரசிகர்பட்டாளத்தை கொண்டுள்ள விஜய், அஜித் போன்றவர்களின் நிலையும் அவ்வாறே?? கடந்தகாலங்களில் ரஜினி வசூலுக்கு இணையாக பேசப்பட்ட விஜயின் மாஸ்ஹீரோசிய படங்கள் அவரது ரசிகர்களை திருப்தி செய்தலும் ஏனைய ரசிகர்களை திருப்தி செயவில்லை. அதற்க்கு மாறாக வந்த காவலன் ஹிட்... இதானல்தான் என்னமோ இனிவரும் அவரது படங்கள் நண்பன், பொன்னியின் செல்வன் என மாறுபட்டதாகவே உள்ளது?
இப்படி மாஸ், ஹீரோசிய படங்களில் தொடர்ந்து நடிக்கும் ரஜினி போன்றநடிகர்கள் இனி காணாமல் போவது உறுதி...!
பதிவின் சில பாயிண்ட்க்கு நறுமுகை வலைத்தளத்திற்க்கு நன்றிகள்
இதையும் படியுங்கள் ஹீரோயிசத்திற்கு வித்திட்ட எம்.ஜி.ஆர்